Tuesday 27 May 2014

சூ ழ் நி லை



திரு . வை. கோபாலகிருஷ்ணன்  அவர்களால் 
விமர்சனப் போட்டிக்காக தேர்தெடுக்கப்பட்ட  கதை,  
அவர் எழுதிய  "  சூழ்நிலை * 

இதற்கான இணைப்பு 


இந்த வாரம்  ஒரு  சின்னஞ்சிறு கதை  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.   

அன்றாட  வாழ்க்கையில்  ஒரு சில  நிகழ்வுகள்  அல்லது  செயல்கள்  பல  தொடர்ச்சியான  நிகழ்வுகளுக்கு  வித்திட்டு விடுகின்றன.  சுற்றி இருக்கும் மனிதர்களின்  பாராட்டுக்களோ   அல்லது  இடித்துரைத்தலோ  அந்த  குறிப்பிட்ட  செயலை  மையப்படுத்தியே  இருக்கும் .  

ஒரு  சராசரி மனிதன்,    தன்  மகளுக்காக  திருமணத்தை பேசி  முடிக்கும்  சமயத்தில்,  கை பேசியின் மூலமாக  ஒரு துயரச்  செய்தியை  கேட்க  நேரிடுகிறது .  அந்த சமயத்தில்,  அவன்  வாயிலிருந்து  வெளிவரும்  வார்த்தைகளைப்  பொறுத்தே  அதன் பின் விளைவுகளும்  அமையும். அந்த  பின்  விளைவுகள்  சுபமானதாகவும்  இருக்கலாம் அல்லது  துயரமானதாகவும்   இருக்கலாம்.  எதுவாக இருப்பினும்,  இதற்கு காரணம் ,  அந்த மனிதனின் அந்த குறிப்பிட்ட  நேரத்தில் எடுக்கும்  சமயோசிதமான முடிவும், செயல்களும் தான்  . 

இதே நிகழ்ச்சி , இக்கதையின்  கதா நாயகனின்  வாழ்விலும்   நிகழ்கிறது.  தகவல் கிடைத்தவுடன் , கதா நாயகன் ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா,"  என்ற வார்த்தைகளைக் கூறுவதாக சித்தரிக்கப்பட்டு, இதன் பின் விளைவுகளாக  சில  நிகழ்ச்சிகளையும்  கூறுவதுதான்  கதை .

இதை  இப்படி செய்திருக்கலாமே,  அப்படி செய்திருக்கலாமே  என்று  எழுதுவதெல்லாம்  வெறும்  கற்பனைகளே !  இவை  எதுவும் ,  எழுதிய  கதையை  மாற்றிவிட முடியாது .  விமர்சனம் என்பது , நடந்து முடிந்த  நிகழ்ச்சிகளைப் பற்றிய  எழுத்தாளனின்  கண்ணோட்டம் . 


 இந்த  கதையில், பின் விளைவுகளாக  கூறப்பட்டிருக்கும்  நிகழ்வுகளை  விமர்சிப்பதா ?  அல்லது   கதையின்  ஆணி வேராக  இருக்கும் செயலை  விமர்சிப்பதா ?  

இன்றைய விமர்சனத்துக்கான  கதையில்,  கதா நாயகன் தன் மகளின்  திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது  கிடைத்த தகவலும் , அதை  அவர் கையாண்ட விதமும்தான்  முக்கிய நிகழ்ச்சி.  மற்றவை எல்லாமே  அதன்  பின்  விளைவுகள் தான் .

எனவே,  நான்  தேர்ந்தெடுத்தது,  கதையின்   முக்கிய  நிகழ்வை , ஆணிவேராக  இருக்கும்  கதாநாயகனின்  செயலை விமர்சிப்பது என்ற முடிவை !   அதையே மையமாக வைத்து  விமர்சனத்தையும் எழுதினேன் . 

என் விமர்சனம்  இதோ !  


விஞ்ஞானத்தின்   வெகு வேகமான  வளர்ச்சி  ,  இன்று   
அனைவரிடமும்  கை பேசி  இருப்பதுதான் .  
மிக  நல்ல  வளர்ச்சிதான். 

ஆனால் , இதன் மறுபக்கம்  மிக கொடூரமானது.
கைபேசியில் பேசிக்கொண்டே  சாலைகளில்  நடந்து 
செல்லும்  இளைஞர் களும், இளைஞிகளும் ,  சர்வ 
சாதாரண காட்சி இன்று.  கைபேசியில்  பேசிக்கொண்டே  
வாகனங்களை   ஓட்டிச் செல்லும்  காட்சிகளும்  
சர்வசாதாரணம்.   வாகனங்களை  ஓட்டிச்  செல்லும்போது  
கைபேசியில்  பேசக் கூடாது  என அரசாணை  இருந்தாலும், 
அதை மீறத் துடிப்பவர்கள்  ஏராளம்.  !  
இதனால்  ஏற்பட்ட  விபத்துக்கள்  ஏராளம் !  
இறந்தவர்களும்  ஏராளம் ! 

மற்றுமொரு  கொடுமை,  பாட்டு கேட்கிறேன்   பேர்வழி ,  
என்று  இரு  காதுகளையும்  அடைத்துக்கொண்டு ,  
பாட்டைத் தவிர   வேறு எந்த  சப்தத்தையும்  கேட்க  
முடியாமல் ,  விபத்துக்களில்  சிக்கியோரும்  ஏராளம். ! 

இவர்களின்  மறைவு, அவர்களின்  பெற்றோர்களுக்கு  
மட்டுமல்ல,  நாட்டிற்கும்  பேரிழப்புதான் !  

இந்த  ஞான  வளர்ச்சியின்  மற்றுமொரு  பக்கம்,  
ஏதாவது  பேசவேண்டுமா,  எடு  கை பேசியை,  
தொடர்பு கொள்  உடனே !  -  இத்தகைய  எண்ணம்  
கொண்டவர்கள்  ஏராளம், ஏராளம்.  

இவர்களுக்கு , தான்  தொடர்பு கொண்டவர்கள் , எந்த 
சூழ்நிலையில்  இருக்கிறார்கள் ?  அவரால்  இப்போது 
தம்மோடு  பேசமுடியுமா  அல்லது  தான்  பேச விரும்பும் 
விஷயத்தை  அவரால்  தொடர்ந்து  பேசமுடியுமா  என்பதைப் 
பற்றியெல்லாம்  கவலையே  இல்லை. 

தொடர்பு கொள்ளப்பட்டவர்தான்,  செவாலியர்  சிவாஜி 
கணேசனைப்போல்  , அழுதுகொண்டே  சிரித்தும்  அல்லது 
சிரித்துக்கொண்டே  அழுதும்  சமாளிக்க வேண்டும் !   

இத்தகைய  ஒரு  சூழ் நிலையை  மனதில் கொண்டு , 
திரு. வை.கோபாலகிருஷ்ணன்  எழுதியிருக்கும்   சிறுகதை, 
" சூழ் நிலை " . 

டில்லியில்  வசிக்கும்  ஒரு  " பிசினஸ்  மேக்னட் "  ஆக 
சித்தரிக்கப்படுகிறார்,  கதா நாயகன். 

சென்னை  சென்றுள்ள  அவர்  தன்  வேலைகளின் ஊடே 
தன்   மகளுக்கு  ஒரு  சம்பந்தத்தை  பேசி  முடிக்கும் 
தறுவாயில்,  கைபேசியில்  தொடர்பு கொண்ட  அவரது மகள் ,
தன்  தாத்தா (  அம்மாவின்  தந்தை )  சாலை விபத்தில்   
இறந்துபட்டதையும், அவரது உடல்  G.H. இல்  இருப்பதையும் 
தெரிவிக்கிறாள். 

சம்பந்தம் பேசப்பட்டு  முடிவடையும்  நிலையில் ,  இந்த  
மரணச்  செய்தி  ,  அனைத்தையும்  குலைத்துவிடுமல்லவா ? 
நொடியின்  பகுதியில்  , முகத்தில் எந்த சலனத்தையும்  
காட்டாமல்  , " ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா,"  என்ற 
வார்த்தையை  கதா நாயகன்  உச்சரிப்பதாக  ,  கதாசிரியர்  
காட்டியிருக்கும் விதம், கதா நாயகனின் வார்த்தைகள் 
 பொய்யென்றாலும், 
"  பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
     நன்மை பயக்கு மெனின்  " 
என்ற  வள்ளுவரின்  குறளை  நினைவுறுத்துவது  
பாராட்டத்தக்கது.

திருமணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது , 
கிடைத்த  துக்கமான  செய்தியை வெளிக்காட்டாமல்,  
காலமறிந்து   , சாமர்த்தியமாக  அதை மறைத்து , திருமணத்தை  
உறுதிப் படுத்திக் கொண்டுவந்த கதா நாயகனின்  செயல், 
"  அருவினை யென்ப உளவோ கருவியாற்
     கால மறிந்து செயின்  " 
என்ற  வள்ளுவரின்  மற்றொரு குறளையும்   நினைவுறுத்துவது 
பாராட்டத்தக்கது. 

கதாநாயகனின்  இதே  செயல்,  
" ஒரு செயலைச் செய்யும்  மனிதனின் கண்ணோட்டம்,  
தான்  ஈடுபட்டுள்ள  செயலுக்கு  எத்தகைய 
சேதமும்  வராமல்  இருக்கவேண்டும் , அப்படியிருப்பின் 
அவருக்கு  இவ்வுலகமே சொந்தமாகும், "  
என்ற  கருத்தினைக் கொண்ட 
 (  கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்கு 
    உரிமை உடைத்திவ் வுலகு. )
வள்ளுவரின்   மற்றும்   ஒரு  குறளை  வாசகர்களுக்கு  
நினைவுறுத்துவதும்   பாராட்டத்தக்கது.  

G.H. இலிருந்து  தன்  மாமனாரின்  உடலை  சீக்கிரமாகவே 
பெற்று, அவரின்  ஈமக் கிரியைகளுக்கு  ஏற்பாடு செய்து, 
தேவையான  பொருளுதவியும்  செய்து  மாமியாரின்  மனதில் 
நீங்கா  இடம் பிடிப்பவராக  கதா நாயகனைச்  சித்தரித்த  
விதத்தில், ஒரு குடும்பத்தின்  மருமகன்  என்பவர்,  அந்த  
வீட்டிற்கு  ஒரு  மறு  மகன்தான்  என்ற உணர்வை  , 
வாசகர்களுக்கு  உணர்த்திய  கதாசிரியர், 
கதாநாயகனின்  செயலை, 
 " இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
    துன்பம் துடைத்தூன்றும் தூண் "  
என்ற வள்ளுவரின்  குறளுக்கு ஏற்பவும்   அமைத்திருக்கிறார்.   

கோட்டீஸ்வரனான  கணவன் , தன்  பிறந்த வீட்டை  மதிப்பதேயில்லை
 என்ற  கருத்தைக் கொண்ட  கதா நாயகனின்  மனைவி , இறுதியில் 
வயது வந்த மகள்  பக்கத்தில்  இருக்கிறாள்  என்பதையும்  மறந்து,
 கணவனிடம்  சண்டையிட்டு, பின்  உண்மையுணர்ந்து  ,  தன மகள் 
பக்கத்திலேயே  இருப்பதை   மறுபடியும்  மறந்து,  கணவனின்
மார்பில்  சாய்ந்து சரணடையும்  விதம்  , கதாசிரியருக்கு  சபாஷ்  
சொல்ல வைக்கிறது .  

திருமணம் பேசும் போது  இடையே வந்த துக்கத்தையும், துன்பத்தையும், 
இன்பமாகக் கருதி , கதா நாயகன்  செயல்பட்ட  விதத்தில், 
 "    இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
      ஒன்னார் விழையுஞ் சிறப்பு." 
(   பொருள்:  துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, 
     அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.. )
என்ற  மற்றும்  ஒரு  குறளை ,  வாசகர்களுக்கு  நினைவுறுத்துகிறார்,
கதாசிரியர்.

இக்கதையின்  ஆணி வேர் ,  கதா நாயகன்  தன்  மகளுக்காக  
திருமணம்  பேசி  முடிக்கும் தறுவாயில்,  மகளிடமிருந்து  வந்த  
துக்கச் செய்தியும்,  அதை  கதா நாயகன்  கையாண்ட  விதமும்தான். 

இக்கதை,  சிறு வயதில் படித்த  ' யானையைப் பார்த்த  குருடர்கள் "
கதையைத்தான்  நினைவுக்குக் கொண்டுவருகிறது ,
இக்கதையிலும்  கதா நாயகனாக  ஒரு  யானை !  பட்டத்து   யானை ! 


பெரிய பிஸினஸ் மேனாக இருப்பதால், எந்த வீட்டிலும், 
எந்த ஊரிலும், எந்த நாட்டிலும், ரொம்ப நேரம் தங்க முடியாத  
சுறுசுறுப்பான  யானை !

கதா நாயகனின்  செயலை , வெவ்வேறு  கண் கொண்டு 
பார்க்கும்  கதா  பாபாத்திரங்கள் .  

தன்  தாத்தாவின்  மரணத்தைத் தெரிவித்ததும் ,
“அப்படியாம்மா, ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா. நான் அவசியம் 
போய்ப் பார்த்துட்டு, அப்புறம் உனக்கு போன் செய்கிறேன்”  
என்ற தந்தையின்  பதிலைக் கேட்டு அதிர்ந்து போன  மகள். 

"  மாமனாரின் திடீர் மரணத்தைக் கேள்விப்பட்ட பிறகாவது ஒரு
    மனிதாபிமானத்துடன் பேச மாட்டாரோ! அவ்வளவு பணத்திமிரு ...... 
     இருக்கட்டும் நேரில் போய் பேசிக் கொள்கிறேன் "   என்ற  
பொருமலுடன்  சென்னை சென்று ,  அங்கும்  தன் கணவனுடன்  
பேசாமலே  இருந்த ,  கோபக்கார  மனைவி.

தன் கணவனை இழந்த துக்கத்தையும் மறந்து, தன் பணக்கார 
மற்றும் மிகவும் பிஸியான மாப்பிள்ளையைப் பற்றி அடிக்கடி 
பெருமையாகப் பேசி பூரித்துப் போகும்  மாமியார் .  

" யார்  எப்படிப் பார்த்தாலென்ன, என்னை!  நான்  என்  கடமையைச் 
செய்துவிட்டேன் !  நானும்  தங்கம் தான், என் உள்ளமும்  
தங்கம்தான் "  என்ற நினைப்புடன் ,  ஆர்ப்பரிக்காமல், 
அமைதியாய்  இருக்கும்  கதா நாயகன். 

எழுத்துக்களை  அழகாக, மிக அழகாக  பின்னலிட்டிருக்கிறார் .
ஆசிரியர். 

 திருவள்ளுவரின் , 
வாய்மை  என்ற  அதிகாரத்தின்  கருத்தினையும் 
காலமறிதல்  என்ற   அதிகாரத்தின்  கருத்தினையும் , 
கண்ணோட்டம்  என்ற  அதிகாரத்தின்  கருத்தினையும் ,
இடுக்கண்  அழியாமை  என்ற  மற்றொரு  அதிகாரத்தின்  கருத்தினையும்,
கதா நாயகனின்  ஒரே ஒரு செயலில்  புகுத்தி, 
கருத்தாழம் மிக்க  இந்த  கதையை  எழுதிய  விதம்  , 
இக்கதை ,  
கதாசிரியரின்   மற்றுமொரு  சாதனை  என்றே   
பாராட்ட வைக்கிறது

O-O-O-O-O-O-O-O-O-O-O-O-O-











  












.


























Sunday 25 May 2014

வெற்றியின்  ரகசியம்.


பாகம்  2


தத்துவத்தின்  கடுமையை  கதைகளின்  எளிமை  குறைக்கும்.   
உனக்கு  ஒரு கதை  சொல்லட்டுமா.... ?


கடலோரத்து  புதர் ஒன்றில்  இரண்டு  குருவிகள்  கூடு அமைத்து  , குடித்தனம் செய்தன.  இரண்டு  முட்டைகள்  இட்டன.  கருத்தோடு  பேணி வந்தன .

ஒரு நாள்  கடல் பொங்கி ஆடியதில்,  இரண்டு  முட்டைகளும்  நீருக்குள்  போய்விட்டன. குருவிகள்  பதறி தவித்தன .  ஒரு குருவி  விசும்பி  அழ ,
மறு  குருவி  சொல்லிற்று :

"  எதற்கு  அழுகிறாய் ... ?  உனக்கு  அந்த முட்டைகள்  வேண்டும்,  அவ்வளவுதானே ..  ?  நான்  எடுத்துதருகிறேன் ..... " என்று  வீரம்  பேசியது.

"  எப்படி  முடியும்...? "  மறு  குருவி  கேட்டது.

" உழைத்தல்  முடியும்.  முட்டைகள்  கடலுக்குள்தானே  இருக்க வேண்டும்......  கடல் நீரை  மறுபக்கம்  இறைத்து விட்டால் ,  முட்டைகள் தெரியும், அல்லவா...!  அப்போது, அவைகளை  நாம்  எடுத்துக் கொள்ளலாம் , அல்லவா...." உறுதியாய்  பேசிற்று.

"  முடியுமா.....? "  மறு குருவி ,  சந்தேகம்  எழுப்பிற்று.

" முயற்ச்சித்தால்  முடியும்.. "  இறுமாப்போடு  அந்த  குருவி  பேசியது.  இரண்டு  குருவிகளும்  உயரக் கிளம்பின . தங்கள்  அழகால்  கடல்  நீரை  முகர்ந்து  மறுபுறம்  கொட்டின . இரவு பகல் பாராமல்  அலைந்தன .  முட்டைகள் கிடைத்தே  ஆக வேண்டுமென்ற  வெறியுடன்  உழைத்தான . பசி , தூக்கம் , நோவு  எல்லாம்  மறந்து  நீரை அலகால்  முகர்ந்து  மறுகரையில்  ஊற்றிக் கொண்டிருந்தன .  

அந்த  கடற்கரை  வழியே  ஒரு முனிவன்  நடந்து  வந்தான் . இடமும், வலதுமாய் இந்த  குருவிகள்  அலைவதைப் பார்த்தான்.  தன்  மனோசக்தியை  அவைகளுக்குள்  செலுத்தி ,  அவைகள்  நோக்கம்  அறிந்து கொண்டான்,  சிரித்தான் .

அதே  மனோசக்தியால்  அந்த முட்டைகளை  கண்டு பிடித்து ,  நீரிலிருந்து  அவைகளை மிருதுவாக எடுத்து  கரையில் வைத்தான்.. தன்  வழியே  நடந்து போனான் .  

குருவிகள்  முட்டைகளைப் பார்த்து  திகைத்தன.  துள்ளிப் பறந்தன .

"  நான்  சொன்னது  நடந்து விட்டது  பார் ...  உழைத்தால்  உயரலாம்...  முயற்ச்சித்தால்  முடியலாம்.....  நாம்  நீரை முகர்ந்து  அந்த  கரை சேர்த்ததில் ,  கடல்  வற்றி  முட்டைகள்  வெளியே  வந்து விட்டன , பார்.. "  என்று  முதல் குருவி  கூறியது .

மறு குருவி  "  ஆமாம்,   ஆமாம்... " என்றது.

அந்த  குருவிகள்  முயற்சி செய்திருக்காவிடில்  முட்டைகள்  கிடைத்திருக்காது.  முட்டைகள்  கிடைத்ததற்கு  முயற்சி மட்டுமே  காரணமல்ல. 

இது ரொம்ப  சூட்சுமமான கதை ...!  யோசிக்க, யோசிக்க  எத்தனயோ  விஷயங்கள்  இதிலிருந்து  புரியும்.  கண் மூடி ,  இந்த  கதைக்குள்ளேயே  இரு...  !

0-0-0-0-0-0










 ஜாதிப் பூ


06/05/2014 


விமர்சனப் போட்டிக்காக  
திரு. வை. கோபாலகிருஷ்ணன்  அவர்களால் 
வெளியிடப்பட்ட  கதை  "  ஜாதிப் பூ "

அதற்கான  இணைப்பு  

மிகவும் அழகான  சிறு கதை !
அழகான  ஒரு  பூக்காரியிடம், மனதை பறிகொடுத்த 
ஒரு இளைஞன் , தன் எண்ணத்தை  மற்றொரு 
பூக்காரியிடம் ( அவள் தான் ,  தான் விரும்பும் 
பெண்ணின்  பாட்டி என்பதை அறியாமல்  )
வெளியிடும்  நிகழ்ச்சி !

கதையை,  கவிதைபோல்  எழுதிய 
கதாசிரியரை  பாராட்ட வேண்டும் !

கதையை  விமர்சிக்கலாம் ! 
கருத்தைச் சொல்லலாம் !

இது   கவிதை !
மிகவும் அழகான  கவிதை !
அழகை,   அழகென்றுதான்  சொல்ல முடிந்தது ,
என்னால் .

பேரழகு என்றால் ,  அதில்  மறுபடியும்  
" அழகு " என்ற  வார்த்தை வருகிறதே ! 

மாற்று ?

யோசித்தேன் ! 
ஒன்றும்  தோன்றவில்லை !
தோற்றுத்தான்  போய்விட்டேன் !

அதனால்,  கதையின்  போக்கிலேயே 
மனதிற்கு  தோன்றியதை   கிறுக்கினேன் ! 

கிறுக்கியதையும்  அனுப்பிவிட்டேன், 
விமர்சனம்  என்ற பெயரால். 

விமர்சனம்  ஏதும் இல்லாமல் ,  கதையின்  போக்கிலேயே 
எழுதுவது  அர்த்தமில்லாத  ஒன்றுதான் !  இதைப் போலத்தான்  
இதற்குமுன் , "  மறக்க மனம்  கூடுதில்லையே " 
என்ற  சிறுகதைக்கு ,  சில பல  சினிமா  பாடல்  வரிகளை  
தொகுத்திருந்தேன் !  

இந்த  "  ஜாதிப் பூ " என்ற சிறுகதையில். 
" ஜாதிப் பூ ' விற்க்கும் , ஜாதி வெறிக்கும்  பின்னலிட்ட 
கதாசிரியரைப்  பாராட்ட வேண்டும்.

பூக்காரியிடம்  சிறு  வயது முதல்  தன்  வளர்ச்சியைப் 
பகிர்ந்து கொண்ட  கதா நாயகனிடம் ,  சிறு வயதிலேயே 
ஜாதி பூவைப் பற்றிய  ஒரு முதிர்ச்சியான  கேள்வி எழுப்பியது,  
கொட்டும்  மழையில் , உடல்  நலமற்றிருந்த  கிழவியையும், 
பூக்கூடையியும்  நனையாமல்  ,  குடிசை வர  குடை பிடித்து 
கூட்டிச் சென்ற , மனிதாபிமான, மனித நேயமிக்க  செயல், 
ஆகிய  இரண்டைத் தவிர ,  பாராட்டுவதற்கு  வேறொன்றும் 
இல்லை ,  என்னிடம். 

ஆனால்,  இவ்விரண்டும்  பலப்பல  வண்ணங்களில்  
விமரிசிக்கப்பட்டுவிடும்,  வித்தகர்களால் !!.

இதைத் தவிர  வேறு   என்ன  என்பதை  யோசித்து ,
ஒன்றும்  தோன்றாமல்தான்  , தோற்றுவிட்டேன்  என்று 
கூறினேன் !

தன் பேத்திக்கு, பேங்கில்  வேலை பார்க்கும்  கதாநாயகன் 
மணமகனாக  வருவது ,  பூக்காரிக்கு  சந்தோஷம்தான்.  
அவளை  விடுத்து , வேறு யாருக்கு  ???


இந்த கேள்விக்கு    "பதிலாக," நான்  தேர்ந்தெடுத்தது,  
பூக்காரியுடன் ,  மழையில்  நனையாமல்  சென்ற 
"  பூக்கூடையை " !

இக்கதையில்  பங்கு பெறும்  பாத்திரங்கள்,
பூக்காரி, பூக்காரியின் பேத்தி ( கதா நாயகி ) , கதா நாயகன்,
மற்றும்  குடையும்,  பூக்கூடையும் தான் !
குடை  ஒரே ஒருமுறை , காட்சியில் இடம் பெறுகிறது !
பூக்கூடை,  ஒவ்வொரு நாளும்  பூக்காரியுடன்  வருவது ! 

இந்த கதைக்கு , என்னுடைய  கருத்து ,
" இது  அனைவரின்  மனம் நிறைந்த  திருமணம் " 
 என்பதுதான் !


ஆதலால் ,  கதா நாயகன் , கதா நாயகியின்  திருமணத்தை 
எண்ணிக்   களிப்புறும்  தோழனாக,  பூக்கூடையை 
நிர்ணயித்து, கதையின்  போக்கிலேயே  கிறுக்கினேன் ,
 சில பல  வார்த்தைகளை  பிரசவித்து !

முடிவு.........................?

அது  எப்படியிருந்தாலும் ,  
சுமார்  40  வருடங்களாக,  சிறு சிறு  கடிதங்களைத் தவிர  ,
( அதுவும் 1989 வரைதான் ) வேறு  எதையும்  தமிழில்  
எழுதத் தெரியாமலிருந்த  என்னை எழுதத்  தூண்டிய ,
திரு.  வை. கோபாலகிருஷ்ணன்  அவர்களுக்கு 
மனமார்ந்த  நன்றிகள்  !!!  




என் கிறுக்கல்கள்  !!!

0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0

தூசியெனும்  போர்வையுடன் 
தூங்கிக்கொண்டிருந்த  என்னை,
தட்டி எழுப்பியது , 
ஒரு  
வளைக்கரம் ! 

சீந்துவார்  இல்லாமல் 
சீரற்று போன என்னை, 
சீண்டியது  யாரென்று 
சீற்றமுடன்  பார்த்தேன் ! 
சிரிப்புத்தான்  வந்தது, 
சீண்டியது,  
என் 
தோழி  என்பதால் ! 

என்  தோழி, 
வீறிட்டு  அழுதபோது 
விளையாட்டு  காட்டிட 
உருண்டு, புரண்டவன் , 
நான் !

என் தோழி, 
பூச்சாண்டி காட்டிட   
அவளுக்கு  முகமூடியாய் 
இருந்தவன், 
நான் ! 

தத்தியும், தவழ்ந்தும் வந்து , 
கால்களால்  எனக்கிட்ட  முத்தத்தை, 
மறந்திருப்பாள்  என்றிருந்தேன்,
மறக்கவில்லை  என்றது ,
அவள்  பார்வையும்,
புன்சிரிப்பும் ! ! 

பூக்காரி  எனும்  குதிரையேறி,
குடிசைக்கும்,  கோவிலுக்குமாய்,
சவாரி  செய்தவர்கள்  
நாங்கள் !

படிப்பை  முடித்து,
பாட்டியிடம்  சீராட, 
விடுப்பில்  வந்திருக்கும் 
பருவப் பெண்,
என்  தோழி ! 


மல்லிகைமுல்லை
ஜாதிப்பூ தாழம்பூ மகிழம்பூ,
கனகாம்பரம் ,    வாடாமல்லி 
வெண் தாமரைசெந்தாமரை, 
மரிக்கொழுந்து நந்தியாவட்டை, 
ரோஜாபட்டுரோஜா, 
ஜவ்வந்தி  பாரிஜாதம் 
இருவாட்சி,  செம்பருத்தி  
என,
எத்தனைப் பூக்கள் சுமந்திருப்பேன், அன்று !
அத்தனையும்  தோற்றுவிடும்,
அவள்  அழகினில், இன்று !

வேலை ஒன்றுமில்லை ! 
வெட்டியாய் இருக்க 
விருப்பமும்  இல்லை ! 
போட்டியிடுகிறேன்  உன்னுடன், 
திறமை  உண்டு  என்னிடம் !
கடை விரிப்பேன்  உன் எதிரில் ,
காட்டிக் கொள்ளாதே  உன் உறவை ! 
பகுதி  நேர  விற்பனையில் 
பாங்காய்  விற்றிடுவேன்,  
பூக்கள்  அத்தனையும்  ! 
கொக்கரித்தாள் ,  என்  தோழி !  
நெட்டி முறித்தாள்,  அந்தக்   கிழவி ! ! 



" ஜாதிப்பூ  வாங்கினால். 
  ஜாதி வெறி  வந்திடுமோ "
தயங்கி தயங்கிக்  கேட்ட    
சிறு வயது கண்ணனை, 
வரித்துவிட்டேன்,  
என் தோழனாக !
ஆனால்  
அவனுக்குத்  தெரியாது,
அவன், 
என் தோழனான  கதை  !

முக்கால் கிழவியிடம், 
முதல் ரேங்க் வாங்கியதை, 
மூச்சிரைக்க  ஓடிவந்து 
முக்கி முக்கி சொன்னவன், 
என் தோழன் !
ஆனால்,  
அவனுக்குத்  தெரியாது,
அவன், 
என் தோழன் என்று !

பள்ளி முதல் 
பேங்க் வரை 
ஒவ்வொரு  வளர்ச்சியையும் 
தள்ளாத கிழவியிடம் 
தயங்காமல் சொன்னவன், 
என் தோழன்  !
ஆனால்,  
அவனுக்குத்  தெரியாது,
அவன், 
என் தோழன் என்று ! 

நல்லார்  ஒருவருக்காக 
நாடெங்கும்  பெய்த மழையில் ,
நலிந்திருந்த கிழவியையும்,
மெலிந்திருந்த என்னையும் ,
குடிசை வரை 
குடை பிடித்து 
கூட்டிப் போனவன், 
என் தோழன் ! 
ஆனால்,  
அவனுக்குத்  தெரியாது,
அவன், 
என் தோழன் என்று ! 

பணி ஒய்வு  
பெற்ற   என்னை, 
மீண்டும் 
பூச் சுமக்க ஆணையிட்டாள், 
என் தோழி ! 

கடை  விரிப்பேன், 
கோவில் எதிரில் !
காவலும்  உண்டு 
என்  எதிரில் !
பக்கத்தில்  துணையிருக்க 
பூச்சுமந்து  வாராய் நீ !
பணியிட்ட  தோழியிடம் 
பணிந்துவிட்டேன் நானும் !

கன்னிப் பெண்,  விரித்த  கடை !
ஈக்களும் மொய்த்தன ! 
கொசுக்களும்  சுற்றின ! 
மொய்த்த ஈக்களை 
" ச்சூ" என்று  ஒட்டினாள் !
சுற்றிய கொசுக்களை 
" ப்பூ" ஊதினாள் ! 
கடைவிழி பார்வைக்கு 
ஏங்கிய காளையர் ஆயிரம் !
உள்ளம் கருத்திருக்க, 
நெற்றிக்கு  வெள்ளையடித்து,
உறவாட வந்த  கயவர்கள்   ஆயிரம் , ஆயிரம்  ! 
ஏறெடுத்து  பார்த்ததில்லை, 
ஏனென்றும்  கேட்டதில்லை !
கருமமே  கண்ணாயினாள், 
கடை விரித்த  என் தோழி !

அவள்  வேலை,  அவளுக்கு ! 
என் ஏக்கம், 
என் தோழனைப்  பார்பதற்கு ! 

எத்தனை  முறை வந்தாலும்,
திரும்பிப்  பார்த்ததில்லை !
பல்லில்லா  கிழவியிடம் 
பல்லைக்காட்டி இளிப்பதுதான் 
அவன்  வேலை ! 
பூ  விற்பவளைத்தான்  தெரியாது !
பூச்  சுமந்த என்னையுமா  தெரியாது ?
திட்டத்தான்  வாய் திறந்தேன் !
திரும்பிவிட்டான்  என்பக்கம் !
பார்த்தது  என்னையல்ல !
என் தோழியையும்,
அவளை மொய்த்திருந்த 
ஈக்களையும்,  கொசுக்களையும்தான்  !

கனல்  தெறித்த  அவன்  பார்வையில் 
கண்டு கொண்டேன், அவன்  உள்ளத்தை !
கனிவு கொண்ட  அவன் பார்வையில் 
அறிந்து கொண்டென், அவன்  ஆசையை ! 
மெல்ல  திரும்பினேன் ,
அப்பப்பா !
எத்தனை  அழகு,  என் தோழி ! 
இத்தனை  அழகும்,  என் தோழனுக்கே !
குதித்தேன் !  கும்மாளமிட்டேன் !

பூக்களின்  பெயர்களை 
கேட்டு கேட்டு 
தெரிந்து கொண்டாயே,  அன்று  ! 
உனக்காக பூத்திருக்கும் 
இந்த 
பூவையின் பெயரையும் 
கேட்டு தெரிந்துகொள், இன்று , 

கூவினேன், வாய்வலிக்க !
கேட்கவில்லை காது , 
அந்த  மடையனுக்கு !
மடையன் தான் !
ஆனாலும், 
அவன்,  என் தோழன் ! 
அவனுக்கு  தெரியாது,
கூவியது,
அவன் தோழன் என்று ! 

பூ விற்ற ,  பூவை வாங்கியோர் 
திரும்பிப் பார்க்கவில்லை,
பூச் சூடாத கிழவியை !
சோடை போனது,
வியாபாரம்  அன்று ! 

மிகுதியான  பூக்களை 
வேகமாக  மாறிட,
விடியலில் சென்றுவிட்டாள் 
என் தோழி,
தன் துணையை மாற்றிக் கொண்டு !

ஏமாற்றம்தான்,
ஆனாலும், ஒரு சந்தோஷம் !
என் தோழன் , 
என் அருகில் இருப்பதால்  !
ம்ம்... 
வெகுநாட்களுக்குப் பிறகு,
மீண்டும்  ஒரு சவாரி,
இக்கிழக் குதிரையின் மேல் ! 

கட்டிவிட்டாள் தன்  கடையை. 
வெகு சீக்கிரத்தில், 
என் தோழி !
கண் சிமிட்டி விடை பெற்றாள்,
உறவைச் சொல்லாத உறவுக்காரியிடம் ! 

பூ  வாங்க வந்தவர்கள் 
பூவைக் காணாமல்,
பூ  விற்றவளிடம் கேட்டார்கள், 
பூ  எங்கே ? என்று, 

சொந்தத்தைச் சொல்லாத 
சொந்தக்காரியும், 
சொல்லிவிட்டாள்  அனைவருக்கும் ,
இனி 
அவள்  வருவது  
வாரத்தில்  இரு முறை என்று !

இருமுறை  என்ன ?
ஒருமுறையும் வேண்டாம் !
கண்டித்து சொல்லிவிடு, 
அவளிடமும், 
அவள்  உறவுகளிடமும் !
பூ விற்க வந்தவளுக்கு 
பூச்சூட்ட ஆசைஎனக்கு !
மாலை விற்க வந்தவளுக்கு 
மாலையிட ஆசை எனக்கு !
கிசுகிசுத்தான் என் தோழன்,  
கிழவியின் காதில் ! 

கிசுகிசுத்தது  என்தோழன்.
ஆனால்,
ஊரறிய சொல்லிவிட்டான் 
தன் ஆசிகளை, 
அந்த  இறைவன் !
கோவில்மணி ஒலித்தது,
மேளதாளம்  பின்தொடர ! 

பாம்புச் செவியெனக்கு ,
கேட்டுவிட்டேன்  அத்தனையும் !
தீட்டிக் கொண்டேன் 
என் காதுகளை !
கிழவியின் பதில் 
என்ன என்று ?
பேத்தி சொல் தட்டாத  
பாட்டி இவள் !
உறவைச் சொல்லவில்லை !
வந்த  உறவையும் விடவில்லை !
வரவேற்றாள்  என் தோழனை,
" வாடா  மாப்ளே " என்று !

என் தோழிக்கு  திருமணம் !
என் தோழனுக்கும் திருமணம் !
உள்ளம்  நிறைந்தது !
கண்கள்  பனித்தன !
யாரிடம் பகிர்வது ,
என் 
உள்ளக் களிப்பையெல்லாம் ?
என் குரல் கேட்காது ,
வையகத்தில்  யாருக்கும் !
மவுனமாய் இருந்துவிட்டேன்,
மவுனம்தான் என் வாழ்த்துரை !

மவுனத்தை கலைத்தது, 
அருகில் நின்ற 
இரு கால்கள் !
மெல்ல நிமிர்ந்தேன்,
உற்றுப் பார்த்தன, 
இரு கண்கள் !

ஓ !....
என் குரல் கேட்டதோ ?
மெல்ல வினவினேன் !
அசைந்தது தலை,
மேலும், கீழும் !
அக்கணத்தில், 
கொட்டிவிட்டேன் அத்தனையும் !
திரும்பிப் பார்த்தார்,
என் தோழனை !
ஆசீர்வதித்தது, 
அவரின் புன்சிரிப்பு ! 


யாரென்று கேட்கும் முன்,  
இடைமறித்தது 
மற்றும் ஓர் குரல் !
" எழுத்தாளரே, வணக்கம் "

இறைவனுக்கு  
பூச்சுமந்த  நான், 
அன்று, 
சூட்டினேன் அவன் பெயரை,  
என் 
சிறு வயது தோழனுக்கு !

எழுத்து அறிவிப்பவன் 
இறைவன் என்றால்.
எழுதி அறிவிப்பவனும் 
அவன் தானே !
ஆதலினால்,
இன்று 
சூட்டிவிட்டேன் இவருக்கும், 
அவனின் மறுபெயரை !
  
ஏட்டினில்  எழுதிடுவார் ,
என் தோழியின் திருமணத்தை !
வலைத்தளத்திலும்  பதிவிடுவார் ,
என்  தோழனின்  திருமணத்தை !
பாரோரும் புகழ்ந்திடுவர்
பாங்கான இவர்  எழுத்தை !

சோர்ந்திருந்த என்னை,
என் குரல் கேட்டு,  குறை நீக்கி,
எழுச்சியுரச் செய்த எழுத்தாளருக்கு,
ஆயிரம்  நன்றிகள் !
அனந்த கோடி நமஸ்காரங்கள் !

இனி,
சோம்பியிருக்க மாட்டேன்!
வேலைகள் 
மெத்த உண்டு !

பூச்சுமக்க வேண்டும் நான்,
என் தோழியின் திருமணத்திற்கு !
பூச்சுமக்க வேண்டும் நான் ,
என் தோழனின் திருமணத்திற்கு, 
சுமக்க வேண்டிய பூக்கள் 
ஆயிரம், ஆயிரம் !
ஒவ்வொரு  அழைப்புக்கும் 
ஒவ்வொரு  பூ என !

ஏ !  பூக்காரக் கிழவி ! 
கடையை கட்டிவிடு,
குடிசைக்கு போகவேண்டும் நான் !
என் தோழியிடம் பகர வேண்டும், 
என் தோழனின் திருமணத்தை !
பார்க்க வேண்டும் அவள் முகத்தில் ,
படரும் சிரிப்புக்களை !
பார்க்க வேண்டும் அவள்  முகத்தில் , 
வளைந்தோடும்  வெட்கத்தை !

கோவிலில், 
மணி  அடித்துவிட்டது ! 
மேளமும்  கொட்டிவிட்டது ! !
இன்னும் என்ன மெத்தனம் !
அடியே !  பூக்காரக்  கிழவி ! 
நாள்  குறிக்கச் சொல் 
அந்த குடுமிக்கார  ஜோசியனை !
அடுத்த  முகூர்த்ததில் 
அவசரத் திருமணம் !

அவசரம் .....
எனக்குத்தான் !
உழைத்து உழைத்து 
ஓடாகிப் போன என்னை, 
ஓரங்கட்டுவதற்கு முன்,
பூச்சுமக்க வேண்டும் நான்,
என் தோழியின்  திருமணத்திற்கு !
பந்தல் முதல் பள்ளி (அறை ) வரை ,
நான் சுமக்கும் பூக்கள்தான் !

வந்திடுவீர்,  வையகத்தீர்,
வாழ்த்துரைக்க, என் தோழிக்கு !
வந்திடுவீர்,  வையகத்தீர்,
வாழ்த்துரைக்க, என் தோழனுக்கும் ! 

இது ,
பூக்கூடையின்  பிதற்றலென 
வாளா(ரா)திருக்க வேண்டாம் ! 
வரவேற்க காத்திருப்பேன் 
வாயிற்படியில், 
பூக்களை சுமந்துகொண்டு !


0-0-0-0-0-0-0-0-0-0-0