” அழைப்பு ”
நாள் : 01/05/2014
திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் சிறுகதை !
விமர்சனப்போட்டிக்காக வைக்கப்பட்ட ஒரு படைப்பு !
இதற்கான இணைப்பு
http://gopu1949.blogspot.in/
சென்னை, நங்க நல்லூரை நினைவுறுத்தும் வகையில்
அமைக்கப்பட்டிருக்கும் கதை !
விலாசச் சீட்டை கையில் வைத்துக் கொண்டு ,
நங்க நல்லூரில் வீட்டைத் தேடும் சில நகைச்சுவை
கதைகளை படித்திருக்கிறேன், சிறு வயதில் !
பல முறை சென்னை சென்றிருந்தாலும்,
நங்க நல்லூர் அனுபவம் எனக்கு கிட்டியதில்லை !\
எல்லாம் சொற்கேள்விதான் !
நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் திருமண அழைப்பை
நேரில் கொடுக்கச் செல்லும்போது ஏற்படும் சில
சங்கடங்களையும், அனுபவங்களையும் ,
திருமணத்தின்போது , சில சடங்குகளை
இன்னார்தான் செய்யவேண்டும் என்ற கட்டுப்பாடுகளையும்
பிணைத்து எழுதப்பட்ட கதை .
இதில், மணமகனின் தந்தை " நண்பர் " எனப் பெயரிடப்படுகிறார் !
இவரின் நண்பருக்குப் பெயரில்லை. இவரைத் தன்னிலைப்படுத்தி,
இவர் நமக்குச் சொல்வதுபோல எழுதப்பட்ட கதை !
அதாவது, இவர் ( நமக்கு கதை சொல்பவர், கதா நாயகன் என்று நாம்
கொள்ளவேண்டும் ) மணமகனின் தந்தைக்காக எதைச் செய்தாலும்,
அச்செயல் " நண்பருக்காக செய்யப்பட்டது " என்ற எண்ணம்
ஏற்படும் வகையில் , சூட்சுமமாக பாத்திரங்களுக்கு
பெயரிட்ட கதாசிரியரை பாராட்டத்தான் வேண்டும் !
அப்படியென்றால். கதாசிரியர் மறைமுகமாக வெளிப்படுத்த
நினைப்பது , நட்பின் மேன்மையை !
மேலும், கதா நாயகன் , நண்பரின் உறவினர் காலில் விழுந்து
" நண்பருக்காக மன்னிப்பு கேட்பது " போன்றதொரு காட்சி !
( இது, TOTAL SURRENDER , முழு சரணாகதி என்று குறிப்பிடப்பட்டுகிறது
இக்கதையில் )
இக்காட்சி, கதாசிரியருக்கு இந்த முழு சரணாகதியை மேன்மைப்
படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்குமோ என்ற ஐயத்தையும்
என்னுள் உருவாக்கியது .
நட்பு என்றவுடன், என் மனதில் தோன்றியது,
கர்ணனும், துரியோதனனும் கொண்டிருந்த நட்பு .
பாஞ்சாலி, பீஷ்மரின் காலில் விழுகின்ற காட்சியை ,
சுமார் 20 வருடங்களுக்கு முன், ஞான பூமி என்ற இதழின்
ஒரு பதிப்பில், " தெரிந்த புராணம், தெரியாத கதை "
என்ற தலைப்பின் கீழ் , படித்ததும் நினைவிற்கு வந்தது .
இவ்விரண்டும் என்னை , மகா பாரதத்தின் பாத்திரங்களை
வைத்து ஒரு கற்பனை உரையாடலை எழுத தூண்டியது .
எழுதினேன் !
எழுதினேன் ! !
எழுதிக் கொண்டே இருந்தேன் !
அனுமார் வால்போல நீண்டுக் கொண்டே போய்விட்டது !
விமர்சனம் என்ற பெயரில் , அனுப்பியிருக்கிறேன் 1
முடிவு, 10/05/2014 அன்று தெரியவரலாம் !
17/05/2014.
சில தவிற்க முடியாத காரணங்களால் போட்டியின் முடிவு
ஒத்தி வைக்கப்பட்டிருந்தது ! போட்டியின் முடிவு இன்று
வெளியாகி உள்ளது.
என்னுடைய எழுத்துக்கள் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள் , இரண்டாவது பரிசினை
என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
பரிசு பெற்ற திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
சிறந்த கதையினைப் படைத்து , என்னை எழுதத் தூண்டிய
கதாசிரியர் அவர்களுக்கும், என்கருத்தினையும் , எழுத்துக்களையும்
பரிசுக்கு உகந்ததாகத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் ,
மனமார்ந்த நன்றிகள் !
போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டதற்கான இணைப்பு :
http://gopu1949.blogspot.in/
என் எழுத்தும், கருத்தும் :
தேவலோகத்தில், பாண்டவர்கள், பாஞ்சாலி மற்றும் கர்ணன் , அளவளாவிக் கொண்டிருக்க, கண்ணன் அவர்களுடன் கலந்து கொள்கிறான்.
அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்று, " நீண்ட நாட்களாயிற்று
கண்ணா, உன்னைப் பார்த்து. எங்களை மறந்தாயோ ? "
என வினவ,
கண்ணன்: பூலோகம் சென்றிருந்தேன் ! என் பக்தன் ஒருவன்,
தன் மகனுக்கு திருமணம் நிச்சயம் செய்திருக்கிறான் !
சகதேவன் : உன் பக்தனா ! படாத பாடு படுத்தியிருப்பாயே அவனை !
தருமன் : சகாதேவா !
சகதேவன் : நான் உண்மையைத்தானே கூறினேன் !
தருமன் : அவனை விடுத்து , நீங்கள் தொடருங்கள் , கண்ணா !
கண்ணன் : நீங்கள் நினைப்பதுபோல் இல்லை ! கலியுகத்து மக்கள்
மிகவும் புத்திசாலிகள் ! என் மனம் , அவர்கள்பால்
லயித்துவிட்டது !
விஜயன் : மிகுந்த பீடிகையுடன் ஆரம்ப்பிக்கிறாய், கண்ணா !
ஆவலை தூண்டுகிறாய் ! விரிவாக சொல்லேன் !
கண்ணன் : தன் மகனுக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்திருக்கும்
பக்தர்,
சகதேவன்: அவர் பெயர் ?
கண்ணன் : ம்..ம்.. நண்பர் என்று வைத்துக் கொள்வோம் ! அவருக்கு.....
ஒரு நண்பர் !
சகாதேவன் : நண்பருக்கு, நண்பரா ? மிகவும் குழப்புகிறாய் , கண்ணா !
கண்ணன் : அவரை " கதா நாயகன் " என்று வைத்துக் கொள்வோம் !
இப்போது திருப்திதானே !
தருமர் : சகதேவா ! இடையில் குறுக்கிடாதே ! நீங்கள் தொடருங்கள் ,
கண்ணா !
கண்ணன் : திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே
அழைப்பிதழ்களை அச்சடித்துக் கொண்டு வந்து விட்டார்,
நண்பர் ! அந்த அழைப்பிதழ்களின் ஓரங்களில், மஞ்சளைத்
தடவி , பூஜை அறையில் வைத்து , என் ஆசியையும்
பெற்றுவிட்டார் !
கர்ணன் : கண்ணனின் ஆசீர்வாதம் பெற்ற திருமணமா ? மிகவும்
சிறப்பானதாக இருக்குமே !
கண்ணன் : வெளியூர்களில் வசிக்கும் அன்பர்களுக்கு, காலதாமதமாய்
கிடைக்கும் தகவல்களால் ஏற்படும் இன்னல்களைத் தவிர்க்க,
முன்கூட்டியே யோசித்து, அவர்களின் பெயர்களையெல்லாம்
பட்டியலிட்டுவிட்டார் !
சகதேவன் : இந்த " முன் கூட்டியே யோசிக்கும் திறமையை " நண்பருக்கு
கொடுத்தது நீதானே, கண்ணா ?
கண்ணன் : ஆம் ! அதிலென்ன சந்தேகம் ?
சகதேவன் : அதனால் தான் பயமாயிருக்கிறது, ! முன்கூட்டியே
யோசிப்பதில் , வித்தகனாயிற்றே , நீ !
ஒரு பாதியை சொல்லிவிட்டு, மறு பாதியை மறைத்து,
மற்றவர்களை துன்பத்தில் ஆழ்த்தி , வேடிக்கைப் பார்ப்பதில்
வல்லவன் அல்லவா நீ !
தருமர் : விளையாட்டு வேண்டாம், சகாதேவா !
அது நடந்து முடிந்த கதை !
இன்றைய நிகழ்ச்சியின் முடிவை அறியாமல் , வீணே
வார்த்தைகளைக் கொட்டுவது தவறு .
உன் தவறான வார்த்தைகளால், பாஞ்சாலியின் முகம்
வாட்டமடைவதைப் பார் !
பாஞ்சாலி : ஆம் சுவாமி ! இளையவரின் வார்த்தைகள் , என் மனதில்
பழைய நினைவுகளைக் கொண்டுவந்து விட்டது !
கண்ணன் : ஆஹா ! என்ன பொறுமை ! என்ன பொறுமை !
அன்றும், இன்றும்...... நீ மாறவேயில்லை, தர்மா !
வாழ்த்துகிறேன், உன்னை !
தருமர் : வாழ்த்துக்களுக்கு நன்றி, கண்ணா !
நீங்கள் தொடருங்கள் !
கண்ணன் : தினமும் அழைப்பிதழ்களை தபாலில் சேர்த்துவிட்டு,
அவைகளை அனுப்பிய தேதியையும் குறித்து
வைத்துக் கொள்வார், நண்பர் !
கர்ணன் : என்ன ஒரு நேர்த்தி ! பாராட்டுகிறேன் கண்ணா, உன் பக்தரை !
கண்ணன் : நண்பருக்கு ஒரு மைத்துனர் . அவரின் இருப்பிடம் , நண்பரின்
இருப்பிடத்திலிருந்து வெகு தூரம். மும்பை என்ற இடம் .
நேரில் சென்று அழைப்பிதழைக் கொடுக்க ஆவல்.
ஆனால், இந்த ஒரு அழைப்பிற்காக மட்டும் சில நாட்களைச்
செலவிட வேண்டியிருக்கும் . அதனால், திருமண அழைப்பிதழை
தபாலில் அனுப்பி விடலாம் என்று எண்ணி தன் மனைவியின்
கருத்தைக் கேட்கிறார், நண்பர்.
கர்ணன் : நியாயம் தானே ?
கண்ணன் : மனைவியும் சரி என்று சொல்லிவிடுகிறார் .
பாஞ்சாலி : கணவனின் கருத்தே தன் கருத்தென கொண்ட மகராசி !
சகதேவன் : வீணாக கருத்துக்களைக் கொட்டிவிட்டு , மாட்டிக் கொள்ளாதே ,
பாஞ்சாலி !
பாஞ்சாலி : நான் உண்மையைத்தானே கூறினேன் !
கண்ணன் : தொலைவில் இருக்கும் மைத்துனருக்கு , அழைப்பிதழை
அனுப்பிவிட்டு, உள்ளுரில் இருக்கும் அன்பர்களுக்கும்,
நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நேரில் சென்று
அழைப்பிதழைக் கொடுத்து, திருமணத்திற்கு அழைக்க
வேண்டும் என்ற ஆசை , நண்பருக்கு ,
அவ்வாறு செல்லும்போது, தன் மனைவியும் , பட்டு உடுத்தி ,
சீவி, சிங்காரித்து, தலை நிறைய மலரணிந்து, கையில்
வெள்ளி சிமிழில் குங்குமம் ஏந்தி, உடன் வர வேண்டும்
என்பதுவும் நண்பரின் ஆசை !
கர்ணன் : நியாயமான ஆசைகள்தானே, கண்ணா ?
கண்ணன் : அங்குதான் சிக்கல் ! காலையில் சிலரையும், மாலையில்
சிலரையும் சந்தித்து , அவர்களை திருமணத்திற்கு அழைப்பது
என்று திட்டம் தீட்டியிருந்தார், நண்பர் !
ஆனால், அவரின் மனைவியோ தொலைக் காட்சியில் வரும்
" அத்திப் பூக்களை " பார்க்காமல் , தலையில் பூக்களைச்
சூட மறுக்கிறார். அதுதான் பிரச்சினை !
கர்ணன் : தொலைக்காட்சி..... அத்திப் பூக்கள் .......
இளவல் சகதேவன் கூறியதுபோல் , மிகவும்
குழப்பிவிட்டாய் , கண்ணா !
கண்ணன் : தொலைக் காட்சி என்பது, உலகத்தில் ஓரிடத்தில் நிகழும்
நிகழ்வுகளை , உலகத்தின் மறு மூலையிலும் காணலாம் !
உதாரணத்திற்கு, மகா பாரதத்தின் பதினெட்டு நாட்கள்
போர்களையும், அரண்மனையில் இருந்தவாறே நேரில்
கண்டு, திருதராஷ்டிரனுக்கு உரைத்தானல்லவா, சஞ்சயன் !
அதைப் போன்றது !
கர்ணன் : அது நீ கொடுத்த வரம் !
கண்ணன் : அன்றைக்கு, அது ஒரு சாதனை ! அதற்கு தேவைப்பட்டது
எனது வரம் !
ஆனால் இன்றைக்கு, பூலோகத்தில் இதெல்லாம் சர்வ
சாதாரணம் !
சகதேவன் : கண்ணா ! நீ கூறியது எனக்கு சரியாக கேட்கவில்லை .
தொலை காட்சி என்றாயா? அல்லது தொல்லைக் காட்சி
என்றாயா?
கண்ணன் : தொலைக் காட்சி என்றுதான் கூறினேன் !
விரும்பியவர்களுக்கு தொலைக் காட்சி !
விரும்பாதவர்களுக்கு தொல்லைக் காட்சி !
அவ்வளவுதான் !
சகதேவன் : உன்னைப் போல் என்று சொல் !
கண்ணன் : சகதேவா ! என்ன உளறுகிறாய் ?
சகதேவன் : அன்று , ஆயர்பாடியில் இருந்த கோபிகையரில் சிலருக்கு
ஓயாத தொல்லையாகவும், சிலருக்கு செல்லப்
பிள்ளையாகவும், இருந்தவனல்லவா நீ !
அதனால்தான் அப்படி சொன்னேன் !
பாஞ்சாலி : கண்ணா ! அந்த அத்திப் பூக்களைப் பற்றி ...
கண்ணன் : அத்திப் பூக்கள் என்பது ஒரு நெடுந்தொடர்.
முற்காலத்தில், இரவில் குழந்தைகளை தூங்க
வைப்பதற்காக, குழ்ந்தைகளை படுக்க வைத்துவிட்டு,
தாயோ, அல்லது வீட்டிலிருக்கும் பெரியவர்களோ கதை
சொல்வார்கள் . குழந்தைகளும் கதையைக் கேட்டுக் கொண்டே
தூங்கிவிடும்.
பாஞ்சாலி : ஆமாம் !
கண்ணன் : முந்தையநாள் பாதியில் நின்ற கதை மறுநாளும் தொடரும் .
இவ்வாறு சொல்லப்படும் கதை , பல நாட்களுக்கு தொடரும்.
ஆனால், இந்த நெடுந்தொடர் முடிவடைய பல மாதங்களும்
ஆகும், பல வருஷங்களும் ஆகும் !
பாஞ்சாலி : எதையெதையோ சொல்லி, ஆவலை தூண்டிவிட்டாய் , கண்ணா !
எனக்கும் அத்தகைய நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும்போல்
இருக்கிறது !
சகதேவன் : பாஞ்சாலி ! நீ கேட்பது வரமா ? இல்லை சாபமா ?
பாஞ்சாலி : ஏன் இப்படி பயமுறுத்துகிறீர்கள் ?
சகதேவன் : வரமென்றால், அதில் எங்களுக்கும் பங்குண்டு !
சாபமென்றால், நீ மட்டும் தன்னந்தனியே பார்த்து, சிரித்து ,
ரசித்து, மகிழ வேண்டியிருக்கும் !
பாஞ்சாலி : அண்ணா ....... கண்ணா ! !
தயவு செய்து , நான் கேட்டதையெல்லாம் மறந்து விடு !
தருமர் : ( பாஞ்சாலியின் பயத்தை ரசித்தபடி ) சகதேவா ! போதும்
உன் குறும்புத்தனம் ! கண்ணனை பேச விடு !
கண்ணன் : மனைவியின் காலம் தாழ்த்தும் இந்த செயலை கண்டிக்க
முடியாமல், அழைப்பிதழ்களைக் கொடுக்க மாலையில்
செல்கிறார், தன் மனைவியுடன் .
சென்றோமா, அழைப்பிதழை கொடுத்தோமா என்று
முடிகிறதா அவர்களின் வேலை . எத்தனை இடையூறுகள் !
போக்குவரத்து நெரிசல்களால் ஏற்படும் கால தாமதம் ,
இவர்கள் தேடிச் சென்றவர்கள் , இவர்கள் செல்லும் நேரத்தில்
அங்கிருக்க வேண்டும் , அப்படியே இருந்தாலும் கதவை
திறப்பதற்கு முன் அவர்கள் எடுத்துக் கொள்ளும்
முன் எச்சரிக்கை,
ஒரே பெயரைக் கொண்ட கட்டிடங்கள்,
ஒவ்வொரு கட்டிடத்திலும் , ஒரே பெயரைக் கொண்ட
பல்வேறு மனிதர்கள் ,
திருமணத்திற்கு அழைக்க வந்தவர்களை லட்சியம்
செய்யாமல், தொலைக் காட்சி பெட்டியில் லயித்திருப்பது,
வந்தவர்களை உட்காரவைத்துவிட்டு, தொலை பேசியில்
பேசிக் கொண்டே அழைப்பிதழின் மேல் கிறுக்குவது ......
அப்பப்பா ! சொல்லி மாளாது, நண்பரும் அவரின் மனைவியும்
பட்ட பாட்டை !
கர்ணன் : உன் பக்தனின் இவ்வளவு துன்பங்களையும் வேடிக்கைப்
பார்த்துக் கொண்டிருந்தாயா, கண்ணா ?
கண்ணன் : நான் எங்கே வேடிக்கைப் பார்த்தேன் ! அழைக்கச் சென்றவர்கள்
என்னை உடன் வர அழைத்தால்தானே நான் அவர்களுடன்
செல்ல முடியும் ? இவ்வளவும், நண்பர் நம் கதா நாயகனிடம்
கூறியது !
சகதேவன் : கதா நாயகன் மிகவும் வருத்தப்பட்டிருப்பாரே , நண்பரின்
வேதனை மிக்க அனுபவங்களைக் கேட்டு !
கண்ணன் : அதுதான் இல்லை ! மிகவும் ரசித்து சிரிப்பார் ! .
நண்பரும், கதா நாயகனும் இரவில், ஒரு கோவிலில்
சந்திப்பதை வழக்கமாகக் கொண்டவர்கள் .
நண்பரின் " அழைப்பு படலத்தை " கேட்பதற்காகவே ,
அவருக்காக துண்டு போட்டு இடம் பிடிப்பார் என்றால்
பார்த்துக் கொள்ளுங்களேன் !
கர்ணன் : துண்டு போட்டு இடம் பிடிப்பதா ? கண்ணா ! ஒன்றும்
புரியவில்லை , எனக்கு !
கண்ணன் : அவர்கள் சந்திப்பது இரவு நேரத்தில் அல்லவா !
கோயிலில் கூட்ட்ம் அதிகம் இருக்கும் !
நண்பர் வருவதற்கு தாமதமானால், அவர் உட்காருவதற்கு
இடம் வேண்டுமல்லவா ? அதற்காக, தன் மேல் துண்டை
விரித்து விட்டு, கேட்பவர்களிடம் " நண்பர் வருகிறார்,
நண்பர் வருகிறார் " என்று சொல்லிக் கொண்டிருப்பார் !
நண்பர் வந்தவுடன் , அவரின் அன்றைய அனுபவங்களைக்
கேட்டு ரசித்துவிட்டு செல்வார் !
கர்ணன் : என்ன கொடுமை இது, கண்ணா !
நண்பருக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை,
ஆறுதல் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை ,
அவரின் வேதனை மிக்க அனுபவங்களைக் கேட்டு
ரசிப்பது என்பது .......................
இத்தனை கேடு கெட்டவர்களா இந்த மானிடர்கள் !
கண்ணன் : ஏன் தவறாக எடுத்துக் கொள்கிறாய், கர்ணா ?
சந்தோஷத்தை மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொண்டால்
அது வளரும் !
துக்கத்தையும், வேதனைகளையும் பங்கு வைத்தால்
அது குறையும் அல்லவா ?
கர்ணன் : இல்லை, கண்ணா ! உன் வாதத்தை என்னால் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை !
கண்ணன் : தவறு, கர்ணா ! என் கூற்றை வைத்துக் கொண்டு நீ தீர்மானிப்பது
சரியல்ல !
தீர விசாரிப்பதுதான் முறை !
இன்று திருமணம் ! நாம் சென்று அங்கு என்ன நடக்கிறது
என்று பார்த்து வருவோம், வா !
சகதேவன் : எதிர்பார்த்தேன் ! இப்படி ஏதாவது நடக்குமென்று !
தருமர் : சகதேவா ! எதையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதே
உன் வேலையாய் போய்விட்டது !
சகதேவன் : முன்பு கண்ணன் இங்கு வந்திருந்தபோது, பெரிய அண்ணன்
கர்ணன், உங்களிடம் துரியோதனனைப்பற்றியும், அவன்பால்
கொண்ட நட்பினைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்
அல்லவா ?
கண்ணன் : ஆமாம் ! அதெற்கென்ன இப்போது ?
சகதேவன் : அப்போது, உன் இதழ்களின் ஓரத்தில் மலர்ந்த புன்சிரிப்பை
பார்த்துவிட்டேன், கண்ணா !
உன்னை நானறிவேன் ! என்னை நீயறிவாய் !!
நீ தீர்மானித்துவிட்டாய் !! விடவா போகிறாய் ??
அண்ணன் கர்ணனுக்கு அழைப்பு விடுத்துவிட்டாய் !!
மீற முடியுமா அவரால் !! சென்று வாருங்கள் !
கண்ணன் : ( பாஞ்சாலியை நோக்கி ) நீயும் எங்களுடன்
வருகிறாய், பாஞ்சாலி !
சகதேவன் : பாஞ்சாலி, உன்னை அப்போதே எச்சரித்தேன்,
கருத்துக்களைச் சொல்லி, மாட்டிக் கொள்ளாதே என்று !
இதோ பார், உனக்கும் ஒரு அழைப்பு !
மீறவா முடியும் , உன்னால் ? சென்று வா !!
--00oo00oo---
பூலோகத்தில் , திருமண மண்டபம் .
கர்ணன் : கண்ணா ! நாம் சரியான இடத்திற்குதானே
வந்திருக்கின்றோம் ?
கண்ணன் : சரியான நேரத்திலும் வந்துவிட்டோம் , கர்ணா !
பாஞ்சாலி, அதோ பார்,, பட்டு உடுத்தி, சீவி, சிங்காரித்து ,
கழுத்து நிறைய நகைகளுடன் ...... அவர்கள்தான்
நண்பரின் மனைவி !
பாஞ்சாலி : அழகாய்த்தான் இருக்கிறார்கள் , கண்ணா !
ஆனால், முகத்தில் ஏதோ ஒரு வாட்டம் இருக்கிறது .
காரணம் என்ன , கண்ணா !
கண்ணன் : மும்பையிலிருந்து அவரின் அண்ணன் திருமணத்திற்கு
வந்து விட்டார் ! அவரின் பிறந்த வீட்டு உறவு என்று
சொல்லிக்கொள்ள இருப்பது , இந்த ஒரு அண்ணன்
மட்டும்தான் .
ஆனால், மும்பையிலிருந்து வந்தவரோ , வானத்துக்கும்
பூமிக்குமாக குதிக்கிறார், தன்னை நேரில் வந்து
அழைக்கவில்லை , அதனால் தனக்கு இந்த இடத்தில்
எந்த மரியாதையும் இல்லை என்று .
நண்பரின் மனைவியாலும் அவரை சமாதானப்படுத்த
முடியவில்லை . இவரும் அண்ணனுடன் சேர்ந்து
கொண்டார் இப்போது. தன் அண்ணனை நேரில் சென்று
அழைக்கவில்லை, தன் பிறந்த வீட்டை சரியாக
மதிக்கவில்லை என்று கணவனிடம் கூப்பாடு
போடுகிறார்.
உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும்
இடி.
பாஞ்சாலி : என்ன வேதனை , கண்ணா, உன் பக்த்தருக்கு !
தூரத்திலிருந்த உறவினருக்கு அழைப்பிதழை தபாலில்
அனுப்புவதற்கு இசைந்தவர்தானே இவர் ?
கண்ணன் : ஆமாம் !
பாஞ்சாலி : இப்போது, தன் நிலையை மாற்றிக்கொண்டு, கணவனை
குறை கூறுவது எவ்வகையில் நியாயம் , கண்ணா ?
கண்ணன் : கலியுகத்தில் இதெல்லாம் சகஜம், பாஞ்சாலி !
புகுந்த வீட்டின் பெருமையைக் காப்பது தன் கடமை என்று
நினைத்தவர்கள் , உங்கள் காலத்தில் இருந்த பெண்கள் !
பிறந்த வீட்டின் பெருமையைப் பற்றி பேசியே, கணவனை
இடித்துரைப்பவர்கள், கலியுகத்துப் பெண்கள் !
பாஞ்சாலி : என்ன இருந்தாலும் , இது உன் பக்தனுக்கு வேதனையல்லவா ?
திருமண நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது !
இந்த பிரச்சினையை தீர்க்க மாட்டாயா?
நீ ஆசீர்வதித்த திருமணமல்லவா இது ?
கண்ணன் : இவர்கள் எப்போதுமே இப்படித்தான் !
முடிந்தவரை போராடுவார்கள் !
தன்னால் முடியாது என்று தெரிந்தவுடன், கையை
தூக்கிக் கொண்டு " கண்ணா " என்று கதறுவார்கள் !
அப்போது ஓட வேண்டும், நான் , உதவி செய்வதற்கு !
இது, எனக்கு விதிக்கப்பட்டது, பாஞ்சாலி !
பாஞ்சாலி : என்னை குத்திக் காட்டுகிறாயா , கண்ணா,
இந்த தருணத்தில் ?
கண்ணன் : தவறாக எடுத்துகொள்ளாதே, பாஞ்சாலி !
அன்று, நீயும் மானிடராக பிறந்தவள் தான் !
நான், மானிடரின் இயல்பை எடுத்துரைத்தேன்,
அவ்வளவுதான் !
அதோ பார், மண்டபத்தின் உள்ளே நுழைகிறாரே,
அவர்தான் நம் கதா நாயகன் !
கர்ணன் : அவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை, எனக்கு.
பிறர் துன்பத்தில் மனம் மகிழும் , ஈனப் பிறவி !
வரும்போதே அவன் கண்கள் நண்பரைத் தேடுகின்றன !
இதோ, நண்பரின் மனைவியிடம் பேசி, நண்பர்
இருக்குமிடத்தையும் தெரிந்து கொண்டுவிட்டான் !
சந்தோஷத்தில் குதிக்கப் போகிறான் !
கண்ணன் : பொறுமையாய் இரு , கர்ணா !
கர்ணன் : எதற்காக பொறுமையாய் இருக்க வேண்டும் !
அதோ பாருங்கள். சுவற்றை நோக்கியிருக்கும் அந்த
பெரியவரை சமாதானப் படுத்தாமல், அவருக்காக
பரிந்து பேசி, நண்பரை சாடும் அந்த நயவஞ்சகனைப்
பாருங்கள் .
கண்ணா ! என்ன இது ?
கதாநாயகன், அந்த பெரியவரின்
காலில் விழுந்து " எனக்காக நண்பரை மன்னிக்க "
வேண்டுகிறான்.
இது மாபெரும் செயல் அல்லவா !
தன்னை மறந்து, தன் நிலை மறந்து ,
வேர் அறுந்த மரம் போல் ,
மற்றவர் காலில் சாஷ்டாங்கமாய் நமஸ்காரம்
செய்வது, முழுமையான சரணாகதியை வெளிப்படுத்தும்
செயல் அல்லவா !
கோவிலில் , தண்டனிட்டு நமஸ்காரம் செய்வது,
தனக்காக, தன்னை உய்விக்க, இறைவனை
வேண்டும் செயல் .
ஆனால் இங்கு, நண்பருக்காக மற்றவர் காலில் காலில்
விழுந்து நமஸ்காரம் செய்த கதா நாயகனின் மனதில்
வேறு ஒரு எண்ணம் இருக்கிறது !
பிறர் துன்பத்தில் இன்பம் காணும் ஈனப் பிறவிகளுக்கு,
இந்த எண்ணம் வராது.
நீ நடத்தும் இந்த நாடகத்திற்கு அர்த்தம் என்ன ?
இதை விவரமாகச் சொல், கண்ணா !
கண்ணன் : எல்லாவற்றையும் நீயே சொல்லிவிட்டு, என்னை
எதற்கு அர்த்தம் கேட்கிறாய் ?
போகட்டும் ! உனக்காக ஒன்றை மட்டும் சொல்கிறேன் !
கதா நாயகனுக்கு , நட்பு என்ற வார்த்தையைப்பற்றி
தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான் !
அது,
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கு
இடுக்கண் களைவதாம் நட்பு
என்ற திருவள்ளுவரின், திருக்குறள் !
கர்ணன் : எத்தனை அழகான குறள் !
மிகுந்த பொருட்செரிவுள்ள குறள் !
இது ஒன்றே போறும், கண்ணா !
கதா நாயகனின் மன நிலையை விளக்க,
இதைவிட சிறந்ததொரு பாடல் ஏதும் இல்லை !
தேரோட்டியின் மகனாக இருந்த என்னை,
அரசனாக்கி அழகு பார்த்த துரியோதனுக்காக,
எதையும் செய்ய தயாராயிருந்த என்னைக் காட்டிலும்.
" எடுக்கவோ, கோக்கவோ " என்று கேட்ட
துரியோதனனின் மன நிலையைக் காட்டிலும்,
நண்பருக்காக மற்றவரின் காலில் விழுந்து
மன்னிப்பு கேட்ட கதா நாயகனின் செயல்
மிகவும் பெரியது !
போற்றத்தகுந்தது !
இந்தச் செயலை, நான் அன்றே செய்திருந்தால்,
துரியோதனுக்காக , நான் தருமனின் காலில் விழுந்து
மன்றாடியிருந்தால், நடந்திருக்குமா
அந்த மகா பாரதப் போர் !
அழிந்திருக்குமா அத்தனை உயிர்களும் !
அகந்தையும், ஆணவமும் என் கண்களை மறைத்துவிட்டது !
இல்லை என்று கேட்டவர்கெல்லாம் ,
இல்லை என்று சொல்லாமல் வாரிக் கொடுத்த நான்,
வெட்கி தலை குனிந்துவிட்டேன்,
நண்பருக்காக தன்னையே வேரறுந்த மரமாக
சாய்த்துக்கொண்ட , இந்த நல்லவன் முன்னால் !
இத்தகைய நல்ல உள்ளத்தையா நான் தூற்றினேன்,
நய வஞ்சகன் என்று ?
இந்த உத்தமனையா நான் தூற்றினேன், ஈனப் பிறவியென்று ?
உன் பக்தனுக்கு, நீ " நண்பர் " என்று பெயர் வைத்த காரணத்தை
ஆராயாமல், அறிவிழந்து விட்டேன், கண்ணா !
நீ பொறுமையாக இரு என்று சொல்லியும் கேளாமல் ,
அறிவிழந்து, வார்த்தைகளை தவற விட்டேன் !
இங்கு அழைத்து வந்து , என்னை பெரும் பாவத்திற்கு
ஆளாக்கிவிட்டயே , கண்ணா ! இது முறையா ?
இது தகுமா ?
பெற்றவளைத் தவிர மற்றவரிடத்தில் எதையும் கேட்காத
நான் , இன்று உன்னிடம் கேட்கிறேன், எனக்கு இரண்டு
வரங்களக் கொடு !
நான் இன்று செய்த பாவத்திற்கு தண்டனையாக,
மறு பிறவி என்று ஒன்றிருந்தால்,...
கண்ணன் : இருந்தால் .....?
கர்ணன் : நான் இந்த கதா நாயகனுக்கு நண்பனாக வேண்டும் !
கண்ணன் : அடுத்து ?
கர்ணன் : ஒற்றை வரியில் , நட்புக்கு இலக்கணம் வகுத்த அந்த
திருவள்ளுவருக்கு மாணாக்கனாக வேண்டும் !
கண்ணன் : விதியிருந்தால், நீ விரும்பியது நிறைவேறும், கர்ணா !
கர்ணன்: நன்றி, கண்ணா ! நன்றி !
கண்ணா ! ஒரு சிறு சந்தேகம் !
கண்ணன் : கேள் !
கர்ணன் : நட்பைப் பற்றி நான் தெரிந்து கொளவதற்காக, என்னை
அழைத்து வந்தாய் .
இந்த பாஞ்சாலியை ஏன் அழைத்து வந்தாய் ?
இந்த அறிவிலியைப் பார்த்து சிரிப்பதற்கா ?
கண்ணன் : நான் உன்னிடம் ஏமாந்து விட்டேன், கர்ணா !
நட்பை பற்றிய குறிப்பினை சீக்கிரம் உணர்ந்து
கொள்வாய் என எதிபார்த்தேன் !
முழு சரணாகதி விஷயத்தில் நீ சோடை போனால்,
அதை எடுத்துச் சொல்ல, அதை முற்றும் உணர்ந்த
அனுபவசாலியான , பாஞ்சாலி உகந்தவள் என்று
எண்ணி அவளை அழைத்து வந்தேன் !
ஆனால் , நீ , சரணாகதி விஷயத்தில் தெளிவாக
இருந்து விட்டாய், அதனால். பாஞ்சாலிக்கு இங்கு
வேலையில்லாமல் போய்விட்டது !
கர்ணன் : பாஞ்சாலியின் அனுபவமா ? அதை கேட்க நான்
ஆவலாய் உள்ளேன், கண்ணா !
கண்ணன் : அதை நான் சொல்வதைவிட , பாஞ்சாலி சொல்வதுதான்
சிறப்பு !
பாஞ்சாலி : வேண்டாம் கண்ணா ! சூர்ய புத்திரரின் மனம்
வேதனைப் படலாம் !
கர்ணன் : நான் உணர்ச்சி வசப்படமாட்டேன் என்று உறுதி
கூறுகிறேன் , பாஞ்சாலி ! உன் அனுபவத்தைச் சொல் !
பாஞ்சாலி : துரியோதனனின் சபையில் நான் மானபங்கப் பட்டது
அனைவருக்கும் தெரியும் !
என்னால் முயன்றவரை போராடினேன் !
முடியவில்லை என்றபோது, கடைசி நிமிடத்தில்
கைகளை தூக்கி, " கண்ணா " என்று கதறினேன் !
என் மானம் காக்கப்பட்டது !
கண்ணன், பாண்டவருக்கு உற்றவன் !
எனக்கு சகோதரனைப் போன்றவன் !
நான் கண்ணனைச் சரணடைந்தேன்,
காப்பாற்றிவிட்டான், என்ற நினைப்பில் இருந்தேன் !
சரணாகதி என்பது இது அல்ல, மற்றொன்றும்
இருக்கிறது என்று எனக்கு உணர்த்தியதும் ,
கண்ணன் தான் !
பாரதப் போரில் 9ஆம் நாள் , இரவு .
" சரியாக போர் புரியவில்லை " என்று பிதாமகரை
இழித்துரைகின்றான், துரியோதனன் !
கர்ணன் : அதனை நான் அறிவேன் !
பாஞ்சாலி : பாதிக்கப்பட்ட பிதாமகர், " பார்த்தனைக் கொல்வேன் "
என்று சபதம் செய்கிறார் .
இதை அறிந்த பாண்டவர்களிடையே பெரும் கலக்கம்.
பீஷ்மரை வீழ்த்த யாராலும் இயலாது என்பது
அனைவரும் அறிந்த உண்மை !
அதுமட்டுமல்ல, அவரே விரும்பினாலொழிய , மரணம்
அவரை தழுவாது என்பதும் அனைவரும் அறிந்த உண்மை !
ஆறுதலும், தேறுதலும் சொல்ல, வேகமாய் வந்த கண்ணன்
வாயடைத்து நின்றுவிட்டான் , எங்களின் நிலை கண்டு !
கேட்பதைக் கொடுப்பவன் கண்ணன் !
கேட்டவுடன் கொடுப்பவனும் கண்ணன் !
ஆனால்,
எதைக் கேட்பது ?
எப்படி கேட்பது ?
தயக்கத்துடன் கண்ணனை நோக்கினோம் !
ஒற்றை வரியில் உத்தரவிட்டான், கண்ணன்,
" பாஞ்சாலி, என்னுடன் வா " என்று !
கொண்டவர்களை நோக்கினேன் ,
யார் முகத்திலும் அசைவில்லை !
மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று
பின் தொடர்ந்தேன் அண்ணனை !
கண்ணன் என்னை அழைத்துச் சென்றது ,
பிதாமகரின் பாசறைக்கு !
பாசறையின் மூலையில், எங்களுக்கு முதுகைக்
காட்டியவாறு ஆலோசனையில் இருந்தார்,
பிதாமகர் !
" சப்தம் செய்யாமல், வேகமாக சென்று , பீஷ்மரின்
கால்களில் விழுந்து விடு" என்று கிசுகிசுத்தான் , கண்ணன்.
நானும் , வேகமாகச் சென்று பிதாமகரின் கால்களில்
விழுந்தேன் . சப்தம் கேட்டு திரும்பிய பிதாமகர்,
என்னை யாரென்று அறியாமல் , எதோ ஒரு பெண் என்று
கருதி, " தீர்க்க சுமங்கலி பவ " என்று வாழ்த்திவிட்டு ,
" நீ யார், பெண்ணே ? " என்று வினவினார்,
நான் மெதுவாக, தலையை நிமிர்த்த , அதிர்ந்து போனார்,
பிதாமகர்.
அவர் கண்களில் தெரிந்த அதிர்ச்சியைப் பார்த்ததும் ,
உணர்ந்து கொண்டேன் , பிதாமகரின், வீழ்ச்சியை !
அப்போதுதான் உணர்ந்து கொண்டேன்,
காலில் விழுவது என்பது, முழுமையான சரணாகதி
என்று !
அப்போதுதான் புரிந்து கொண்டேன், இந்த முழு சரணாகதி,
எதிரியையும் எளிதில் வீழ்த்திவிடும் என்பதை !
அப்போதுதான் தெரிந்து கொண்டேன், இந்த சரணாகதி ,
மாற்றான் மனதையும் மாற்றிவிடும் என்பதை !
இன்று, இந்த கதா நாயகன் அந்த பெரியவரின் காலில்
விழுந்ததுமே புரிந்து கொண்டேன், கண்ணனின்
விளையாட்டை !
கர்ணன் : கண்ணா ! நட்பின் பெருமையை நான் அறிந்து கொள்வதற்காகவும்,
முழு சரணாகதியின் ரகசியத்தை மற்றவர்கள் அறிந்து
கொள்வதற்காகவும், நீ நடத்திய நாடகமா இது !
இதற்காகவே , நண்பரை படைத்து, அவரின் நண்பராக
கதா நாயகனையும் படைத்த
கண்ணா!
கோவிந்தா !
கோபாலா !
கிருஷ்ணா !
மாதவா !
முகுந்தா !
மது சூதனா !
பரந்தாமா !!
உ னக்கு, நட்பைப் பற்றி தெரிந்து கொண்ட என் சார்பிலும்,
முழு சரணாகதியின் மகத்துவத்தை உணர்ந்து கொண்ட
மற்றவர்களின் சார்பிலும், மனமார்ந்த நன்றியும் , பாராட்டுக்களும் !
கண்ணன் : சரி ! நாம் வந்த வேலைதான் முடிந்து விட்டதே ! போகலாமா ?
கர்ணன் : இந்த திருமணம் .....
கண்ணன் : அது நல்லபடியாகவே நடக்கும் ! வளைகாப்பிற்கும், சீமந்தத்திற்கும்
" அழைப்பு " வரும். வாருங்கள் போகலாம் !
-- 0o0o0o0o0--
பிரமிக்கவைத்தது தங்கள் விமர்சனத்திறன்..
ReplyDeleteவித்தியாசமான கோணம் ...
பரிசு வென்றதற்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!!