| சரணாகதி |
| நேற்றுவரை என்னை ஐயா என்று |
| கூப்பிட்டவர்கள்,இன்று ஏன் |
| அவமரியாதையாய் அதட்டுகிறார்கள் ? |
| கை கூப்பியவர்கள் இன்று காலைத் |
| தூக்குவது ஏன்? |
| நேற்று புகழ் மாலை சூட்டக் |
| கூடிய கூட்டம் உண்மையில்லையா ? |
| என்ன நடக்கிறது இங்கே! |
| என்ன காரணம் ? |
| யோசி ! |
| ஆழ்ந்து யோசி ! |
| என் மனம் சரணடையவில்லை ! |
| எப்படி அதை தீர்மானித்தாய் ? |
| சரணடையாத மனம், தான் என்ற |
| அகந்தைக்கு ஆட்பட்டுவிட்டது ! |
| தான் என்ற அகந்தை எழும்பும்போது, |
| புலன்கள் கிளறி எழும்புகின்றன ! |
| புலன்கள் கிளறி எழுந்தால் ? |
| அதற்குத் தீனி தேவைப்படுகிறது. காம, க்ரோத, |
| மத மாச்சர்யங்கள் விழித்தெழுகின்றன ! |
| அதனால் என்ன? அதையெல்லாம் |
| விட்டொழித்தவன் தானே நீ ? |
| அகந்தை எழும்பும்போது, இவை அனைத்தும் |
| புத்துயிர் பெருகின்றன ! தன் உணவுக்காகப் பேயாய் |
| அலைகின்றன. கோபம் தலைக்கேறுகிறது. |
| வார்த்தைகள் வரம்பு மீறுகிறது. எனக்கு மட்டுமே |
| எல்லாம் தெரியும் என்ற மமதை |
| தலைவிரித்து ஆடுகிறது. நான் என்ற எண்ணம் |
| தலை நிமிர்ந்து நிற்கிறது ! புலன்கள் |
| அனுபவிக்க ஆரம்பிக்கின்றன. அதன் பலன்களும் |
| தொடர ஆரம்பிக்கின்றன, |
| விதைத்ததுதானே முளைக்கும் ? |
| ஆம். ! எத்தனை அனுபவித்தாலும், இந்த |
| புலன்களுக்குப் போதவில்லை. அனுபவிப்பது, |
| புலன்களா, மனமா அல்லது இவை இரண்டுமா |
| என்ற கேள்விக்கு பதில் கிடைப்பதில்லை. |
| புலன்கள் மூலம், மனது அனுபவிக்கிறது. மனதை |
| வைத்துக் கொண்டு புலன்கள் வேலை |
| செய்கின்றன. வினையும், வினையின் பயனும், |
| தொடர் சங்கிலியாய் துரத்தும் ! |
| சாதாரண மானுடன் நீ ! |
| உன்னால் மீளவே முடியாது ! |
| முடியும் ! மனம், புலன்கள் இவைகளைத் தாண்டி |
| உள்ளுக்குள் ஒரு அமைதி பரவ வேண்டும். |
| அந்த அமைதி பெற இறையருள் வேண்டும் ! |
| அந்த இறை அருளைப் பெற, மனதில் மற்றச் |
| சலனங்களைத் தவிர்த்து, இறையின் நினைவை |
| ஆழ்ந்து உள்ளுக்குள் அழுத்திக் கொள்ளவேண்டும். |
| இறை நினைவை மனதில் நீக்கமற நிலைக்கச் |
| செய்வதற்கு பணிவு வேண்டும். அந்த பணிதலின் |
| கடை நிலையே சரணாகதி. |
| அந்த இறையிடம் நீயே சரணம் என்று |
| சொல்லிவிட்டால் போதுமா ? |
| போதாது ! தன்னை முழுவதுமாய் இறைவனுக்கு |
| ஒப்படைத்தலே சரணாகதி. தன்னை முழுவதுமாய் |
| ஒப்படடைத்தவனிடம் இருந்து வரும் |
| வார்த்தைகள் தடிமனாக இருக்காது, வரம்பு |
| மீறாது. எவர் மீதும் கோபம் வராது. இறைவனிடம் |
| தன்னை ஒப்புக் கொடுத்தவனை, எந்த புலன்களும் |
| கிறங்கடித்து, வேடிக்கைப் பார்க்காது. புலன்கள் |
| அமைதியானால், மனம் என்னை போற்றியவனை, |
| இழித்தவனை, தூற்றியவனை, நிந்தித்தவனை |
| வேடிக்கைப் பார்க்கத் துவங்கும். அந்த |
| போற்றலும், தூற்றலும் அவனவன் வினையென |
| உணரும் ! நடந்தவை எல்லாம் இறையின் |
| செயலே என்பது வலியுறுத்தப்படும். |
| முதலில் நான் எழுப்பிய வினாக்கள் |
| அர்த்தமற்றது என்பது இப்போது புரிந்தது. |
| யாவும் இறையின் செயல் என்பது மறந்து |
| போனது. நான் வளர்வதும், வாழ்வதும் அவன் |
| செயல் என்பதுவும் மறந்து போனது. |
| நான் முக்கியம் என்ற நினைப்பும், |
| எனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்ற |
| எண்ணமும் அகந்தையைக் கிளறி விட்டது. |
| அதனால் அமைதி போயிற்று ; பணிவு போயிற்று : |
| இதனால் சரணாகதி என்ற தவமும் போயிற்று ! |
| இறைவா ! என் ஐயனே ! எம்பிரானே ! |
| முந்தைய நிகழ்ச்சிகள் யாவும் உன் செயலே |
| என்பதை உணர்ந்து கொண்டேன். இப்போது |
| நான் கற்ற பாடத்தைத் தீவிரமாக பயிலுவேன். |
| ஆழ்ந்து , ஆழ்ந்து தவமியற்றி, உன் பாதங்களைச் |
| சரணடைந்து, உன் பாதங்களை இறுகப் பற்றிக் |
| கொள்வேன். |
| இறைவா! என் குருவே ! |
| நன்றி ! |
| ஓம் …. ஓம்…. ! |
Friday, 8 May 2020
சரணாகதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment